தமிழகத்தில் அதிகரித்து வரும் அரிசி விலை: பொன்னி கிலோ ரூ.80 ஆக உயர்வு என வியாபாரிகள் தகவல்!
சென்னை: ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நெல் விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அரிசி விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சாதம், இட்லி, தோசை, பிரியாணி முதல் பல்வேறு பாரம்பரிய பலகாரங்கள் வரை அரிசி பிரதான உணவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனையான பொன்னி அரிசி தற்போது உயர்ந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பாபட்லா மற்றும் ஆர்என்ஆர் ரக அரிசிகள் ரூ.55-லிருந்து ரூ.70 ஆகவும், பிரசித்தி பெற்ற சீரக சம்பா அரிசி கிலோ ரூ.120-லிருந்து ரூ.200 ஆகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகச் சென்னை போன்ற பெருநகரங்களில் 25 கிலோ அரிசி மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.375 வரை விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் அரிசி தேவையை பெரும்பாலான அளவில் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. இந்நிலையில் பருவமழை பொய்த்தது மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு ஆகியவற்றால் அங்கு நெல் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் விளையும் அரிசி பெரும்பாலும் பொது விநியோகத் திட்டத்திற்கே செல்வதால், வெளிச்சந்தையில் அரிசிப் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளதாக திருவல்லிக்கேணி அரிசி வியாபாரி பாலசண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட நெல், அரிசி வியாபாரிகள் சங்க கௌரவத் தலைவர் ஸ்ரீராம் மணி கூறுகையில், “கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் உள்ளூரிலும் நெல் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.1,700-க்குக் கிடைத்த ஒரு மூட்டை நெல், தற்போது பற்றாக்குறையால் ரூ.2,400 வரை உயர்ந்துள்ளது. நெல் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் அரிசி விலையும் உயர்ந்துள்ளது; நிலைமை சீராகாவிட்டால் அடுத்த மாதத்தில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.





