ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ட்ரம்ப்பின் எச்சரிக்கை: சாத்தியமா? எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணை, உலகப் பொருளாதாரத்தின் முக்கியமான நீர்வழிப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இதன் பங்கு மிக முக்கியமானது. இந்நிலையில், ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கையை தீவிரமாக முன்னெடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக எச்சரித்துள்ளார். ஆனால், சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் மற்றும் ராணுவச் சவால்களைத் தாண்டி இந்த நடவடிக்கை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போர் பதற்றமும் ட்ரம்ப்பின் அதிரடி பேச்சும்
அமெரிக்கா – ஈரான் இடையிலான ராணுவ மோதலைத் தொடர்ந்து ஈரான் ஹார்முஸ் நீரிணைப் பாதையை மூடியதாகவும், தனது நட்பு நாடுகளின் கப்பல்களைத் தவிர பிற வணிகக் கப்பல்கள் அந்தப் பாதையில் செல்ல தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் திடீரென ரத்து செய்ததைத் தொடர்ந்து மீண்டும் போர் பதற்றம் அதிகரித்தது.
கடந்த வாரம் நியூயார்க்கில் உள்ள போலீஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், ஈரானை முழுமையாக போரில் தோற்கடித்த பின்னர் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் எனத் தெரிவித்தார். மேலும், அந்தக் கடற்பகுதியைச் சுற்றி அமெரிக்கப் படைகள் இருப்பதால், அது ஏற்கெனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஈரானின் கடும் எதிர்ப்பு
ட்ரம்ப்பின் கருத்துக்கு ஈரான் கடுமையான எதிர்வினையைத் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கஜீம் காஜிபாதாதி, ஹார்முஸ் நீரிணையை ஒரு ட்வீட், உத்தரவு அல்லது பிரச்சாரப் பேச்சு மூலம் கைப்பற்ற முடியாது என்று கூறினார். ஹார்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது என்றும், ஈரானின் முடிவின் அடிப்படையிலேயே அது திறக்கப்படுவதோ அல்லது மூடப்படுவதோ நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், ஓமனுடன் பேச்சுவார்த்தை நடத்தி நீரிணை வழியாக நடைபெறும் போக்குவரத்தை சீரமைக்க விரும்புவதாகவும் ஈரான் கூறியுள்ளது.
சட்டரீதியாக ட்ரம்ப்புக்கு உள்ள தடைகள்
அமெரிக்க முன்னாள் அரசின் தலைமை வழக்கறிஞர் புரூஸ் ஃபைன் கூறியதன்படி, அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படையில் வேறொரு நாட்டின் பகுதியை தனிப்பட்ட முறையில் இணைத்துக் கொள்ளும் அதிகாரம் அதிபர் ட்ரம்ப்புக்கு இல்லை. செனட் ஒப்புதல் மற்றும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், ஐ.நா. சாசனத்தின் அடிப்படையில் அது ஆக்கிரமிப்புக் குற்றமாகக் கருதப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிட்னி பல்கலைக்கழக சர்வதேசச் சட்ட நிபுணர் நடாலி க்ளீன், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் மீது அமெரிக்கா செலுத்திய அதிகாரத்தைப் போன்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே ஈரான் மீது இதுபோன்ற கட்டுப்பாட்டை செலுத்துவது சாத்தியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் 35 சதவீத மக்கள் மட்டுமே இந்தப் போரை ஆதரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக நிற்கும் முக்கிய சவால்கள்
சர்வதேசக் கடல்சார் சட்டங்கள்: 1982-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சர்வதேச நீரிணைகளில் வணிகக் கப்பல்களுக்கு தடையற்ற பயண உரிமை உள்ளது. ஹார்முஸ் நீரிணையின் கடல் எல்லைகள் ஈரான் மற்றும் ஓமனின் பிராந்தியக் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. எனவே, அமெரிக்கா தனிப்பட்ட முறையில் அங்கு முழுமையான இறையாண்மையை செலுத்துவது சட்டரீதியாக பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
ஈரானின் ராணுவ வலிமை: ஹார்முஸ் நீரிணையின் வடக்குப் பகுதி குறுகிய கடற்பரப்பாக இருப்பதால், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பல்களின் இயக்கம் சவாலானதாக இருக்கும். மேலும், ஈரானின் கரையோர ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகள் அமெரிக்கக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.
பொருளாதார பாதிப்பு: ஹார்முஸ் நீரிணை நீண்ட காலத்திற்கு மூடப்பட்டால், கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 150 முதல் 200 டாலர் வரை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதன் விளைவாக உலகளவில் பணவீக்கம் தீவிரமடைந்து, பொருளாதார நடவடிக்கைகள் முடங்கும் அபாயமும் ஏற்படலாம்.
சீனா – ரஷ்யாவின் எதிர்ப்பும் அமெரிக்க உள்நாட்டு சவாலும்
வளைகுடா எண்ணெய் விநியோகத்தையும், குறிப்பாக ஈரான் மீதான எண்ணெய் சார்பையும் கொண்டுள்ள சீனா, அமெரிக்கா – ஈரான் இடையிலான போரில் ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால், ரஷ்யா மற்றும் சீனா இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக செயல்படக்கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரு நாடுகளும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்க நடவடிக்கைகளைத் தடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், ட்ரம்ப்பின் கருத்து அமெரிக்காவுக்குள்ளும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் காரணமாக உருவாகக்கூடிய பொருளாதாரச் சுமை மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவை குடியரசுக் கட்சியினரிடையேயும் பொதுமக்களிடையேயும் எதிர்ப்பை உருவாக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
உலக நாடுகளுக்கும் ஏற்படும் தாக்கம்
ஜப்பான், தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் தங்களின் கச்சா எண்ணெய் தேவையின் கணிசமான பகுதியை ஹார்முஸ் நீரிணை வழியாகப் பெறுகின்றன. எனவே, இந்த நீர்வழிப் பாதையை அமெரிக்கா ஒருதலைப்பட்சமாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியமும் கவலை தெரிவித்துள்ளது.
மாற்று எண்ணெய் வழிகள் போதுமானதா?
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால், மாற்றுக் குழாய்வழிகள் மூலம் எண்ணெயை கொண்டு செல்வதற்கான வசதிகள் குறைவாகவே உள்ளன. சவூதி அரேபியாவின் ‘கிழக்கு – மேற்கு’ குழாய்வழி மூலம் தினசரி சுமார் 50 லட்சம் பேரல்களும், அபுதாபியின் ‘ஹாப்ஷன் – புஜைரா’ வழியாக சுமார் 15 லட்சம் பேரல்களும் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால், ஹார்முஸ் நீரிணை வழியாக தினசரி சுமார் 2 கோடி பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்படுவதால், அதற்கு இணையான மாற்றுப் பாதை தற்போதைய நிலையில் இல்லை.
இதனால், ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்ற ட்ரம்ப்பின் பேச்சு ஈரானுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், சர்வதேசச் சட்டங்கள், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பு, ஈரானின் ராணுவத் திறன் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொள்ளும்போது, இந்த நடவடிக்கை நடைமுறை மற்றும் சட்டரீதியாக மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும். ஹார்முஸ் நீரிணையில் அமைதியையும் வர்த்தகச் சுதந்திரத்தையும் உறுதி செய்வதற்கு அமைதி, சமரசம் மற்றும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தையே முக்கியமான வழியாக அமையும்.



