பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்; ஸ்மிருதி இரானிக்கு முக்கியப் பொறுப்பு
பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கட்சியின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் உள்ளிட்டோருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பாஜக வெளியிட்டுள்ள முக்கியப் பொறுப்புகளின் பட்டியலின்படி, ஸ்மிருதி இரானி தேசியப் பொதுச் செயலாளராகவும், ராம் மாதவ் தேசியத் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேசியப் பொருளாளராகவும், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் தேசியப் பொதுச் செயலாளராகவும், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத் தேசியத் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, பைஜயந்த் ஜெய் பாண்டா, ரேகா வர்மா மற்றும் தாரிக் மன்சூர் ஆகியோர் தேசியத் துணைத் தலைவர் பதவிகளில் தொடர்ந்து நீடிக்கின்றனர். அதேபோல், வினோத் தாவ்டே மற்றும் சுனில் பன்சால் ஆகியோர் தேசியப் பொதுச் செயலாளர்களாகவும், பி.எல். சந்தோஷ் தேசிய அமைப்பு பொதுச் செயலாளராகவும், அனில் ஆண்டனி தேசியச் செயலாளராகவும் தொடர்கின்றனர்.
பாஜகவின் தேசிய சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த அமித் மால்வியா அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக தீபக் மஸ்கே நியமிக்கப்பட்டுள்ளார். சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர்களாக ப்ரீத்தி காந்தி, சிவானந்த் திவேதி, அலோக் பட் மற்றும் அருண் யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேசிய துணைத் தலைவர்களாக ஒடிசாவைச் சேர்ந்த பைஜயந்த் ஜெய் பாண்டா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டி. புரந்தேஸ்வரி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேகா வர்மா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாரதி பிரவின் பவார், கர்நாடகாவைச் சேர்ந்த எம். நாகராஜா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாரிக் மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியப் பொதுச் செயலாளர்களாக டெல்லியைச் சேர்ந்த சுனில் பன்சால் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த சதீஷ் பூனியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசியச் செயலாளர்கள் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த கே. சுரேந்திரன், அனில் ஆண்டனி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த எம். வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



