அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை தவெக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசு மருத்துவமனைகளில் எலிகள் பிரச்சினை இருப்பதாகவும், மருத்துவமனைகளின் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பிரேமலதா தெரிவித்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவக் கட்டமைப்புகளை அரசு தயார்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தவெக அரசு 100 நாட்களை கடந்துள்ள நிலையில், “மாற்றம்” என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என கேள்வி எழுப்பிய பிரேமலதா, 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் புழக்கமே முக்கிய காரணம் என்றும், இளைஞர்கள்தான் தவெக ஆட்சியை கொண்டு வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக்கொண்டார்.
மேலும், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலமே சட்டப்பேரவை இயங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், காலம் காலமாக அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்வதாகவும், ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்து போதிய அளவில் பேசப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.
விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருவதாக கூறிய பிரேமலதா, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு யானைப் பசிக்கு சோளப்பொறி வழங்குவது போல் இருப்பதாக விமர்சித்தார். எனவே, விவசாயிகளின் முழுமையான கடன் தள்ளுபடியை முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பயன்பாட்டால் மனிதர்கள் வன்முறையில் ஈடுபடும் நிலை ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே சக மாணவர்களைக் கூட தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் பிரேமலதா கூறினார். இதைத் தடுக்க போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வந்து, அதன் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்



