ரஷ்யாவின் தாதர்ஸ்தானில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குழந்தை உட்பட 13 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தாதர்ஸ்தான் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் 75 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தாதர்ஸ்தான் பிராந்திய அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிஷ்னெகாம்ஸ்க் தொழில் நகரில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் போது ஏற்பட்ட பாதிப்புகளில் 13 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரில், ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய மிக மோசமான மற்றும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, நடப்பு ஆண்டில் இரு நாடுகளும் தொலைதூர இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக இரு தரப்பிலும் பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் வளங்கள் அதிகம் உள்ள தாதர்ஸ்தான் பிராந்தியத்தில் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. இதனால் ரஷ்யாவின் போர் திறனை பாதிக்கும் நோக்கில் உக்ரைன் தனது பதில் தாக்குதல்களுக்கு இந்தப் பகுதியை தொடர்ந்து இலக்காகக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ‘டாட்நெஃப்ட்’ நிறுவனத்தின் கீழ் செயல்படும் ‘டனேகோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய ராணுவமும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தின் புகாய்வ்கா கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், உக்ரைன் அனுப்பிய 456 ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் தொலைதூர தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு இலக்காகி வருவது போரின் தாக்கத்தை மேலும் அதிகரித்துள்ளது.



