அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப். 28-ம் தேதி தொடங்கிய போர், ஜூன் 17-ம் தேதி ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் 60 நாட்களுக்குள் விரிவான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என அந்த உடன்பாட்டில் முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த 60 நாள் காலக்கெடு ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
போர் நிறுத்தத்துக்குப் பின்னர் இரு தரப்புக்கும் இடையே நீடித்த பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதி அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முக்கிய விவகாரங்களில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையை சந்தித்தன. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை திறப்பு, அமெரிக்காவின் தடைகள் மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் தனது அணுகுமுறையை மாற்றி சரணடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஈரான் விரும்பும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றும், அமெரிக்காவுக்கு தேவையான வகையிலான ஒப்பந்தமே ஏற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாட்டை பலமுறை மீறியதாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா ஒப்பந்தத்தின் விதிகளை கடைப்பிடிக்காததால், அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் பயன் என்ன என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 60 நாள் காலக்கெடு முடிவடைந்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முழுமையாக தணியவில்லை. ஹார்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினையும் தொடர்ந்து முக்கிய விவகாரமாக இருந்து வருகிறது. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.



