மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
“எந்த மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாக விவகாரங்களில் தலையிடக் கூடாது,” என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டி.கே. சிவகுமார், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது என்று தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும், இந்த அடிப்படை புரிதலை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் தன்னால் தலையிட முடியாது என்று குறிப்பிட்ட கர்நாடக முதல்வர், ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென தனித்தனி பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தார். தங்களது மாநிலத்தை எவ்வாறு காப்பது என்பது தங்களுக்கு தெரியும் என்பதை தமிழக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும்; நாம் நமது பணியைச் செய்வோம்” என்று கூறிய டி.கே. சிவகுமார், மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிட தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில், கர்நாடக மாநிலத்தின் கண்ணியத்தை காப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் மான் வேட்டையாடியதாக கூறி அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர், அவர்களது சொந்த கிராமங்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.
இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும் என்றும், சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



