காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் ஆடித்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
படுநெல்லி கிராமத்தில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் விழாவையொட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் இரவு சுவாமி வீதியுலா புறப்படத் தயாரானபோது, அதே பகுதியைச் சேர்ந்த போதையில் இருந்த சில இளைஞர்கள் ஒலிபெருக்கியில் கானா பாடல்களை ஒலிபரப்பக் கோரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்கிற சந்திரசேகர் (27), விக்கி என்கிற நீலகண்டன் (28) ஆகிய இருவருக்கும், போதையில் இருந்த பகவதி, கலைச்செல்வன், புஷ்பராஜ் ஆகியோருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த முன்விரோதத்தின் காரணமாக, போதை கும்பலைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்து சந்துரு மற்றும் விக்கி ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உறவினர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னேரிக்கரை போலீஸார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முயன்றனர். அப்போது அவர்களது உறவினர்கள் போலீஸாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்காததே இந்த சம்பவத்துக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் போலீஸார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 தனிப்படைகள் அமைப்பு
சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஆடித்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் படுநெல்லி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



