பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக பட்டதாரியான ஜவுளிக்கடை ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புது வண்ணாரப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஜவுளிக்கடையில் பணியாற்றி வரும் பட்டதாரியான அஜுமுதீன் (27) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜுமுதீனின் நடவடிக்கைகள் சரியில்லாததால் பள்ளி ஆசிரியை அவரை விட்டு விலகியுள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களாக இருவரும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அஜுமுதீன் தொடர்ந்து பள்ளி ஆசிரியையை பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி தண்டையார்பேட்டையில் உள்ள பிரபல டீக்கடை அருகே பள்ளி ஆசிரியை தனது தோழியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜுமுதீன், மீண்டும் தன்னை காதலிக்குமாறு அவரை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு பள்ளி ஆசிரியை மறுப்பு தெரிவித்ததால், அஜுமுதீன் அவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.
போலீஸில் புகார்
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியை, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பள்ளி ஆசிரியை அளித்த புகாரில் கூறப்பட்ட தகவல்களில் உண்மை இருப்பது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அஜுமுதீனை கைது செய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



