பிரதமர் வீடியோ நீக்கம் விவகாரம்: மெட்டா குழுவுடன் மத்திய அரசு 45 நிமிட ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்டாகிராம் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் சர்வதேச பிரதிநிதிகள் குழுவுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், வீடியோ நீக்கப்பட்டதற்கான காரணங்கள், சமூக வலைதளங்களில் உள்ள பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால், வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ மெட்டா நிறுவனத்தின் தளங்களில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு சார்பில் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் வழங்கப்படும் மூன்றாம் தரப்பு உள்ளடக்க பாதுகாப்பை மெட்டா நிறுவனம் இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சூழலில், மெட்டாவின் சர்வதேச விவகாரங்கள் பிரிவு அதிகாரி ஜோயல் கப்லான், துணைத் தலைவர் நீல் பாட்ஸ், மூத்த இயக்குநர் ரஃபேல் ஃப்ரான்கெல் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணனை சந்தித்தது. இந்த ஆலோசனையின் போது, பிரதமரின் வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், மெட்டா தளங்களில் காணப்படும் பொருத்தமற்ற உள்ளடக்கங்கள், குறிப்பாக சிறார்களை குறிவைக்கும் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக பதிவுகளை விரைவாக அகற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும், அது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை அல்ல என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா தரப்பில், ஆபாச மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் உண்மை சரிபார்ப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நேரங்களில் தங்களது தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அது திட்டமிட்டு நடைபெறுவதில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆனால், மெட்டா குழு அளித்த விளக்கத்தில் மத்திய அரசு முழுமையாக திருப்தி அடையவில்லை என கூறப்படுகிறது. இதனால், அல்காரிதம் செயல்பாடுகளில் ஏதேனும் பாகுபாடுகள் உள்ளதா என்பது குறித்து மெட்டா பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, இன்ஸ்டாகிராம் விளம்பரங்களில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் தோன்றியதாக எழுந்த புகாரில் மெட்டா நிறுவனம் ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடந்த மாதம் மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



