செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இது செயின்ட் லூயிஸ் தொடரில் அவர் சாம்பியன் பட்டம் வெல்வது முதல் முறையாகும்.
கிராண்ட் செஸ் டூர் அட்டவணையின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த தொடரில், ரேபிட் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா முன்னிலை பெற்றிருந்தார். தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவிலும் தனது ஆதிக்கத்தை தக்கவைத்த அவர், ஒட்டுமொத்தமாக 23.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பிளிட்ஸ் பிரிவின் இறுதிக்கட்ட போட்டிகளிலும் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவ் 22 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அமெரிக்காவின் வெஸ்லி சோ 20 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் செஸ் டூர் தரவரிசையிலும் பிரக்ஞானந்தாவுக்கு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் தொடரில் பெற்ற சாம்பியன் பட்டம், சர்வதேச செஸ் அரங்கில் அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டுக்கு மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
தமிழக முதல்வர் பாராட்டு
செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற தொடரில், அதிக ரேட்டிங் கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் சாதிப்பதற்கு தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை எஸ்டிஏடி வழங்கி வருவதாகவும், எலைட் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பிரக்ஞானந்தாவின் சாதனை பாராட்டுக்குரியது என்றும் முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



