16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
16 வயதில் உலகின் மிக இளைய ‘சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்’ (சிஏ) என்ற தகுதியைப் பெற்று துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தனது இளம் வயதிலேயே கணக்கியல் மற்றும் நிதித்துறையில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் அவர், கல்விப் பயணத்திலும் புதிய மைல்கற்களை எட்டியுள்ளார்.
கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்த லக்ஷ்மணன் மெய்யப்பனுக்கு, ஏசிசிஏ (சர்வதேச கணக்கியல் தொழில்முறை படிப்பு) தகுதி பெற்ற அவரது தாயார் மூலம் கணக்கியல் தொடர்பான அடிப்படை கருத்துகள் அறிமுகமாகியுள்ளன. இதன் மூலம் நிதித்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தனது 15-வது வயதில் ஏசிசிஏ படிப்பை தொடங்கிய லக்ஷ்மணன், அந்தப் படிப்பை ஒரே ஆண்டுக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்தார். பின்னர் தனது 16 வயது 141 நாட்களில் ‘சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்’ தகுதியை நிறைவு செய்ததன் மூலம், உலகின் மிக இளைய ஆண் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் என்ற கின்னஸ் உலக சாதனையை துபாயில் படைத்தார்.
கின்னஸ் சாதனையை படைத்த பின்னரும் தனது கல்விப் பயணத்தை அவர் தொடர்ந்து வருகிறார். அடுத்ததாக சிஎப்ஏ (பட்டய நிதி ஆய்வாளர்) பட்டத்தையும் பெற்றுள்ள லக்ஷ்மணன், தற்போது நிதித்துறையில் முதுகலை அறிவியல் (MSc in Finance) படிப்பை பயின்று வருகிறார்.
கல்வியுடன் நின்றுவிடாமல், துபாயில் உள்ள ‘சென்சுரி பைனான்ஷியல்’ நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சி ஆய்வாளராகவும் அவர் பணியாற்றி வருகிறார். முதலீடுகள், சந்தை ஆராய்ச்சி மற்றும் நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட பணிகளை அவர் கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை மற்றும் கல்வியைத் தாண்டி, ஓய்வு நேரங்களில் கடிகாரங்களை வடிவமைத்து உருவாக்குவதிலும் லக்ஷ்மணன் ஆர்வம் காட்டி வருகிறார். இளம் வயதிலேயே பல்வேறு துறைகளில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு வருகிறார்.
இந்த மைல்கல் முக்கியம்
தனது கின்னஸ் சாதனை குறித்து பேசிய லக்ஷ்மணன், இந்த மைல்கல் தனக்கு மிகவும் முக்கியமானது என்றாலும், தகுதிகளைப் பெறுவதை ஒரு போட்டியாக தான் பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். நிஜ உலகப் பொருளாதாரத்தையும், நிதி அமைப்புகளையும் புரிந்துகொள்வதற்கே தான் முதன்மை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பள்ளிப் படிப்புக்குப் பிறகு வழக்கமான படிப்புகளைத் தாண்டி, தொழில்முறை படிப்புகள் மூலம் வெற்றி பெற விரும்புவோருக்கு லக்ஷ்மணன் மெய்யப்பனின் கல்விப் பயணம் ஒரு நல்ல முன்மாதிரியாக அமைந்துள்ளது.



