சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் சதியின் ஒரு பகுதி என்றும், இதில் ஈடுபட்டவர்கள் உண்மையான சீக்கியர்கள் அல்ல என்றும் அவரது மனைவியும், எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நாந்தேட் குருத்வாராவில் கடந்த வியாழக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது, ‘நிஹாங்’ பிரிவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் ‘கிர்பான்’ எனப்படும் சீக்கியர்களின் புனித வாளால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சுக்பீர் சிங் பாதலின் வலது கையில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு முதலுதவி சிகிச்சைக்காக நாந்தேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுக்பீர் சிங் பாதல், கடந்த வெள்ளிக்கிழமை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அவரது உடல்நிலை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபின் கன்னா பகுதியில் உள்ள இஸ்ரு கிராமத்தில், கோவா விடுதலைப் போராட்டத் தியாகி கர்னைல் சிங் இஸ்ருவின் நினைவாக நடைபெற்ற மாநாட்டில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பங்கேற்றுப் பேசினார். அப்போது, கடந்த 48 மணி நேரம் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிகவும் கடினமான காலமாக இருந்ததாகவும், அந்த மாநாட்டில் சுக்பீர் சிங் பாதல்தான் பங்கேற்றிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பஞ்சாபின் அமைதி மற்றும் செழிப்புக்காக சீக்கியர்களின் புனிதமான தலங்களில் ஒன்றில் சுக்பீர் சிங் பாதல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறினார். தாக்குதல் நடத்தியவர் உண்மையான சீக்கியராக இருக்க முடியாது என்றும், அவர் ‘குரு தோகி’ எனப்படும் குருவுக்கு துரோகம் செய்தவர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இரண்டு ஆண்டுகளில் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்டுள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும் என்றும், பஞ்சாபில் அமைதியைக் குலைப்பதற்காக 2015-ம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு வரும் அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் இருக்கலாம் என்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார். அகாலி தளம் பஞ்சாபில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம் சிலர் வெறுப்பை பரப்ப முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
அத்தகைய முயற்சிகள் சுக்பீர் சிங் பாதலின் உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது என்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார். தற்போது தனக்கு பதிலாக மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளுமாறு சுக்பீர் சிங் பாதல் தன்னை அனுப்பி வைத்துள்ளதாகவும், இது பஞ்சாப் மக்கள் மீது அவர் கொண்டுள்ள உண்மையான அன்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



