காவல் துறையை வைத்து மிரட்டுவது ஜனநாயக நாட்டில் சரியா? என மார்க்கண்டேயன் எம்எல்ஏ கேள்வி
காவல் துறையை பயன்படுத்தி மிரட்டுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கையா என்று விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்று கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 4-ம் தேதி அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீன் நிபந்தனையின்படி தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றதால் குறிப்பிட்ட நாளில் காவல் நிலையத்தில் கையெழுத்திட அவர் வரவில்லை. இதையடுத்து இன்று தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு நேரில் வந்த மார்க்கண்டேயன், அங்கு தனது கையெழுத்தைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக சட்டமன்றமும், மற்றொன்றாக நீதிமன்றமும் இருப்பதாக தெரிவித்தார். சட்டமன்றத்தின் கதவுகள் அடைக்கப்படும் என்று கூறப்பட்டபோது அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதற்கு எதிர்வினையாக தான் கருத்து தெரிவித்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், காவல் துறையை பயன்படுத்தி மிரட்டலாம் என சிலர் நினைப்பதாகவும், இத்தகைய நடைமுறைகள் ஜனநாயக நாட்டில் சரியானதா என்றும் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார். தவெகவினர் செய்யும் தவறுகள் குறித்து பதிவு செய்து வருவதாகவும், அதற்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் மார்க்கண்டேயன் விமர்சித்தார். ஜனநாயகம் பத்திரிகையாளர்களுக்கு மறுக்கப்படும் இடம் விரைவில் வெற்றிடமாக மாறும் என்றும், இதுவே உலக வரலாறு காட்டும் உண்மை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முதல்வர் குறித்து தான் பேசிய விவகாரம் சட்டப்பேரவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்படும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்திருப்பதாக கூறிய மார்க்கண்டேயன், இதுதொடர்பாக ஏற்கெனவே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவையின் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று தான் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.



