தவெக எம்எல்ஏ பேரம் பேசப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது; 2.80 கோடி ரூபாய் பணம் பறிமுதல்!
சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தில் தவெக நிலப்பாட்டிற்கு எதிராக வாக்களிக்க, தனக்கு 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஏற்கனவே 12 பேரைக் கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான இந்த ரகசியச் சதித் திட்டத்திற்கு ‘மேகாலயா புராஜெக்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தவெக கட்சியின் 15 சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி, ஆட்சியின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சிங்கப்பூரில் இருந்து செயல்பட்ட லட்சுமணபெருமாள் என்பவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாகக் கொரட்டூரைச் சேர்ந்த பைனான்சியர் கருணாநிதி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் வெங்கடேசன் ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்களிடமிருந்து சதித் திட்டத்திற்காக ஹவாலா முறையில் கொண்டு வரப்பட்ட 2.80 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சதித் திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த நரேஷுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கருணாநிதி மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைதானவர்களின் செல்போன்கள் சைபர் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இந்தச் சதித் திட்டத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, ஏற்கனவே சிறையில் உள்ள நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், வழக்கு ஆரம்பகட்டத்தில் உள்ளதாலும், ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்ற காவல் துறையின் வாதத்தை ஏற்றும், நீதிபதி எஸ்.கார்த்திகேயன் அவர்களின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



