பிஹார் அசோக் தாம் கோயிலில் மின்கம்பி அறுந்ததால் கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு
பிஹாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் தாம் கோயிலில் வழிபாடு செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த நிலையில், இன்று காலை சுமார் 6.45 மணியளவில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மத்தியில் திடீரென பீதி ஏற்பட்டது. இதையடுத்து கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த பலர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக லக்கிசராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக லக்கிசராய் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர குமார் கூறுகையில், அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
எனினும், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஏற்பட்ட கூட்டத்தின் அழுத்தத்தில் தடுப்பு வேலியின் ஒரு பகுதி உடைந்ததாகவும், இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்த 7 பேரில் ஹேமலதா தேவி, லலிதா தேவி, ரிங்கு தேவி மற்றும் மன்மாலா தேவி ஆகிய நான்கு பேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்ற மூன்று பேரின் அடையாளத்தை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த துயரச் சம்பவத்துக்கு பிஹார் முதல்வர் சம்ராட் சவுத்ரி இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவம் மிகவும் துயரமானதும், மனதை உலுக்கக்கூடியதுமாக இருப்பதாக தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிஹார் முதல்வர் தெரிவித்துள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து கோயில் பகுதியில் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அசோக் தாம் கோயிலில் இதற்கு முன்பும் கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, சிராவண் மாத வழிபாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் உயிரிழந்ததுடன், சுமார் 15 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



