சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு ரஷ்ய விண்வெளி வீரர்கள் சுதந்திர தின வாழ்த்து
இந்தியா வரும் 15-ம் தேதி தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்திய மக்களுக்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டது கவனம் பெற்றுள்ளது.
ரஷ்ய விண்வெளி வீரர் பியோட்ர் டுப்ரோவ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய மக்களுக்கு அமைதி மற்றும் வளம் கிடைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்த அவர், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தியா தன்னிறைவு மற்றும் வளத்தை நோக்கிய பாதையில் தொடர்ந்து பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரஷ்ய விண்வெளி வீரரான ஆண்ட்ரே ஃபெத்யாயேவ், இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி “இந்தியா–ரஷ்யா நட்பு நீடூழி வாழ்க” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா அமைதி, வளம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்களது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் மனிதகுலத்தின் முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டதன் 65-வது ஆண்டு நிறைவாகும். இதையும் தங்களது வாழ்த்துச் செய்தியில் ரஷ்ய விண்வெளி வீரர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். விண்வெளி ஆய்வில் இந்தியா தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியா–ரஷ்யா விண்வெளி உறவு
கடந்த 1961-ம் ஆண்டு நவம்பர் மாதம் யூரி ககாரின் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம், அப்போது சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்திய முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்தியா குறித்து ககாரின் தெரிவித்த கருத்துகளையும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்களது வாழ்த்துச் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளனர்.
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிந்ததாகவும், பூமியில் இருந்து பார்க்கும்போது அதைவிட அழகாக இருந்ததாகவும் யூரி ககாரின் தெரிவித்திருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்தியா ‘உண்மையான நண்பர்கள்’ வசிக்கும் நாடு என்று ககாரின் கூறியிருந்ததையும் நினைவுபடுத்திய ரஷ்ய விண்வெளி வீரர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை தங்களது வாழ்த்தின் மூலம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.



