சூரிய மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னணி: ஐ.நா. பருவநிலை மாற்றத் தலைவர் சைமன் ஸ்டீல் பாராட்டு!
புது டெல்லி: இந்தியா தற்போது சூரிய மின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நாடாகத் திகழ்கிறது என ஐ.நா. பருவநிலை மாற்றத் திட்டத்துக்கான நிர்வாகச் செயலாளர் சைமன் ஸ்டீல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். புது டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்துப் பேட்டியளித்த அவர், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதாரத்திற்குப் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் எழுச்சியாகவும் அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “திறமையான தொழிலாளர்களின் பங்களிப்புடன் பசுமை எரிசக்தி உற்பத்தியில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. புதைபடிம எரிபொருட்களில் இருந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு இந்தியா விரைவாக மாறியதே இதற்கு முக்கியக் காரணம். குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டில் இருந்ததைவிடத் தற்போது சூரிய மின்சக்தி உற்பத்தி திறன் 50 மடங்கு அதிகரித்துள்ளதால், இந்தியா இத்துறையில் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது” என்று கூறினார்.
பசுமை எரிசக்தி உற்பத்திக்காக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள், திட்டமிட்ட இலக்குக் காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறனில் பசுமை மின்சக்தி தற்போது பாதியை எட்டியுள்ளது என்றும், இதற்கான பெருமை மத்திய அரசுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களையே சாரும் என்றும் அவர் பாராட்டினார்.
மேலும், சூரிய மின்சக்தி மற்றும் இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருந்ததன் மூலம், இந்தியா கடந்த ஆண்டில் மட்டும் 18 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் புதைபடிம எரிபொருள் கொள்முதல் செலவை மிச்சப்படுத்தியுள்ளது. இங்கு நிறுவப்படும் ஒவ்வொரு சோலார் பேனலும், சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் திடீர் விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாத்து, உண்மையான எரிசக்தி சுதந்திரத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்கிறது என்றும் சைமன் ஸ்டீல் தெரிவித்தார்.



