வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கர மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு – பதற்றம்
வடமேற்கு பாகிஸ்தானில் போலீஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் 9 போலீஸார் மற்றும் 15 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள காவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சென்ற வாகனம் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்க போலீஸார் நேற்று நடவடிக்கையில் ஈடுபட்டபோது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில், “ஹங்கு மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 9 போலீஸார் உயிரிழந்தனர், 28 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் 15 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்” என்றார். இந்த தாக்குதலுக்கு கைபர் பக்துன்கவா முதல்வர் சுகைல் அப்ரிதி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், விரிவான அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீவிரவாதிகளின் வன்முறை, ஆப்கானிஸ்தான் போராளிகளின் ஊடுருவல் மற்றும் தொடர் ராணுவ நடவடிக்கை காரணமாக கைபர் பக்துன்கவா மாகாணம் பல ஆண்டுகளாக அமைதியை இழந்துள்ளது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இம்மாகாணத்தில் தாக்குதல்களை நடத்துவதாக தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கிடையே பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு சிறுமியை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்று, அவரது உடலை ராணுவ வாகனத்தின் முன்புறம் வைத்து சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த செயலில் ராணுவம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.





