கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
கோவை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் கூலர்களில் ஆபத்தான ‘இ-கோலி பாக்டீரியாக்கள்’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரயில் நிலையத்தை தினமும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் 94 ரயில் நிலையங்களில், அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக கோவை முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில், பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 45 சதவீதம் முதல் 77 சதவீதம் வரை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கான வசதிகள், சுகாதாரம் மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றில் கோவை ரயில் நிலையத்தில் சுணக்கம் காணப்படுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் கூலர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளை பரிசோதித்தபோது, அதில் ‘இ-கோலி பாக்டீரியாக்கள்’ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ரயில் நிலையத்தில் குடிநீரின் தரம் தொடர்பான இந்த தகவல் பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரயில் பயணிகள் சிலர் கூறுகையில், இந்தியாவில் ரயில் நிலையங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கைக்கு உரிய முக்கிய போக்குவரத்து மையங்களாக உள்ளதாக தெரிவித்தனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் நிலையில், ரயில் நிலையங்களின் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மக்களுக்கு சுகாதாரமான அடிப்படை வசதிகளை வழங்குவது அவசியம் என்றும், பயணிகளின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் குடிநீரின் தரத்தை மேம்படுத்தி, பாதுகாப்பான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே துறை பொறியாளர்கள் கூறும்போது, கோவை ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகளிலும் சுமார் 80 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளதாக தெரிவித்தனர். அனைத்து இடங்களிலும் குடிநீர் கூலர்கள் அமைக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
கோவை மாநகராட்சியில் இருந்து பெறப்படும் குடிநீரே ரயில் நிலையத்துக்கு முழுமையாக வழங்கப்படுவதாகவும், அந்த நீர் மாதந்தோறும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுவதாகவும் ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர். சிஏஜி அறிக்கை தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரயில்வே துறையின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
இதனிடையே, கோவை மாநகராட்சி பொறியாளர்கள் கூறுகையில், ரயில் நிலையத்துக்கு மாநகராட்சியிடம் இருந்து குடிநீர் பெறப்படலாம் என்றும், ஆனால் அந்த நீரை ரயில் நிலைய நிர்வாகம் எவ்வாறு விநியோகம் செய்கிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
குடிநீரில் ‘இ-கோலி பாக்டீரியா’ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், கழிவுநீர் கலப்பதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும் மாநகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர். மாநகராட்சியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.



