அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு வருகை தரும் துறவிகள் எளிதாக சிறப்பு தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. தங்களது வருகையை முன்கூட்டியே தெரிவிக்கும் துறவிகளுக்கு, சிறப்பு தரிசனத்துக்கான அடையாள அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, துறவிகள் மற்றும் முனிவர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளியூரில் இருந்து வரும் துறவிகளும் குழந்தை ராமரை தரிசிக்க அறக்கட்டளை ஏற்பாடு செய்ய உள்ளது.
இதற்காக துறவிகள் அறக்கட்டளை அலுவலகத்திலோ அல்லது இதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் அதிகாரிகளிடமோ தங்களது வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு, அவர்களுக்கு மரியாதையுடன் கூடிய எளிதான தரிசன வசதி செய்து தரப்படும். இதற்கென தனியாக அனுமதி அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது. இந்த நடைமுறை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
வெளியூரிலிருந்து வரும் துறவிகளுக்கு மட்டுமின்றி, அயோத்தியைச் சேர்ந்த துறவிகளுக்கும் இந்த வசதி வழங்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்துக்கு முன்பாக தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறவிகள் குழுவினருக்கு தரிசன ஏற்பாடுகளை அறக்கட்டளை மேற்கொள்ளும்.
சாதுக்களை ஒருங்கிணைத்து, தரிசன ஏற்பாடுகளை நிர்வகிப்பதற்காக சமீபத்தில் ஆச்சார்யா இந்திரதேவ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவைப்படும் பட்சத்தில் துறவிகளுக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதுடன், அவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்வார்.
துறவிகளின் வருகை மற்றும் தரிசன நடைமுறைகளை மேலும் சீரமைக்கவும் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. காணிக்கைகள் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து துறவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் நிலையில், சிறப்பு தரிசன ஏற்பாடு மூலம் துறவிகளின் அதிருப்தியைக் குறைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
அயோத்தி சாதுக்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது யோசனைகளையும் செயல்படுத்தும் நடவடிக்கைகளை அறக்கட்டளை தொடங்கியுள்ளது. கோயில் விழாக்களுக்கான தர்மக் குழு பிரதிநிதிகளின் பரிந்துரைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர்களின் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடுகள் மற்றும் மதச் சடங்குகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறவிகளின் தரிசன வசதிக்காக அறக்கட்டளை சார்பில் உதவி மைய எண்களாக 05278 – 292000, 80095 22111 மற்றும் contact@srjbtkshetra.org என்ற மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சிஇஓ நியமனம்
அறக்கட்டளையின் சிஇஓவாக இருந்த சம்பக் ராய், காணிக்கை திருட்டுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவிக்கு சுமார் 5,585 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு மூன்று பேர் கொண்ட குழுவால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கொஹலி, லெப்டினண்ட் ஜெனரல் (ஓய்வு) விஷ்ணுகாந்த் சதுர்வேதி மற்றும் விஞ்ஞானி முனைவர் சுரேஷ் ஹாவ்ரே ஆகியோர் அடங்கிய குழு நேர்முகத் தேர்வை நடத்தியது. இதில் 3 பேர் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அந்த இறுதிப் பட்டியலில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் பாண்டே, ஐஏஎஸ் அதிகாரிகளான யேகேஷ்வர் ராம் மிஸ்ரா மற்றும் தினேஷ் சந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவரின் பெயர் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறும் அறக்கட்டளை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



