சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் ஆகிய இருவர் மீதும் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கடந்த ஜூலை 27-ம் தேதி செய்தியாளர்கள் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகிய இருவரை தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தை தடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு செய்தியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இதைத்தொடர்ந்து, சோளிங்கர் போலீஸார் சட்டப்பேரவை உறுப்பினர் கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் ஆகிய இருவர் மீதும் 296 (b), 115 (2), 351 (2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



