திருவண்ணாமலை அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட இருவர் போக்சோவில் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் பெறப்பட்ட புகாரின் பேரில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர் முரளிதரன் ஆகிய இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 1098 என்ற சைல்ட் லைன் எண்ணிற்கு வந்த தகவலைத் தொடர்ந்து, சைல்டு லைன் அலுவலர்கள் மற்றும் சிறார் காவல் பிரிவு சமூகப் பணியாளர்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையின் போது, தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர் முரளிதரன் ஆகிய இருவரும் தங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகச் சுமார் 13 மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர். பள்ளிப் பருவச் சிறுமிகளிடம் ஆசிரியர்களே இவ்வாறு நடந்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, வட்டாரக் கல்வி அலுவலர் தில்லைநாயகி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர் முரளிதரன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



