வங்கதேச மாணவர் போராட்டம் திட்டமிட்ட சதி: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பரபரப்பு குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டம் தனது ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சங்க நிகழ்ச்சியில் ஒலி வடிவில் தனது கருத்துகளை பகிர்ந்த ஷேக் ஹசினா, கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டம் ஜனநாயக முறையை மீறி புதிய ஆட்சியை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், வரும் டிசம்பர் மாதத்தில் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவேன் என்றும், தனது தேசத்தின் மீதான அன்பு என்றும் குறையாது என்றும் அவர் கூறினார். தன்னை எதிர்த்து பொய்யான மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் மூலம் சிக்க வைக்க முயற்சிகள் நடக்கலாம் எனவும், ஆனால் அவை தனது மக்கள் சேவையையும் வாழ்க்கை நோக்கத்தையும் மாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.
தனது உரையை தொடங்குவதற்கு முன், தனது தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான், 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் 1975-ம் ஆண்டு ராணுவ கிளர்ச்சியில் கொல்லப்பட்ட உறவினர்களை நினைவுகூர்ந்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசினா தலைமையிலான அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்து பிரதமர் இல்லம் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து, ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் பிஎன்பி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததாகவும், தாரிக் ரகுமான் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாணவர் போராட்டத்தை அடக்க நடவடிக்கை எடுத்தது தொடர்பான வழக்கில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
மேலும், ஷேக் ஹசினாவை வங்கதேச அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு இந்தியாவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.



