டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவை சர்வதேச தேடப்படும் நபராக ரஷ்யா அறிவிப்பு
டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி (CEO) பவெல் துரோவை, தீவிரவாதத்துக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச அளவில் தேடப்படும் நபராக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை ரஷ்யாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நாசவேலைகளை திட்டமிட உக்ரைன் உளவுத்துறை மற்றும் தீவிரவாத அமைப்புகள் டெலிகிராம் தளத்தை பயன்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட சேனல்கள் மற்றும் உரையாடல்களை நீக்குவதில் டெலிகிராம் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தீவிரவாதத்துக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கு முன்பே ரஷ்யாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் தன் மீது ரஷ்யா குற்றவியல் விசாரணையை தொடங்கியிருப்பதாக பவெல் துரோவ் தெரிவித்திருந்தார். டெலிகிராம் செயலியை தடை செய்வதற்காகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
41 வயதான பவெல் துரோவ் ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவர் உருவாக்கிய டெலிகிராம் செயலி ரஷ்யாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த செயலி அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதன் தலைமை செயல் அதிகாரிக்கு எதிராக சர்வதேச தேடுதல் நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.



