தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டாக உயர்ந்து புதிய வரலாற்று உச்சம்
தமிழகத்தில் நீர்மின் உற்பத்தி, காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் வெளிச் சந்தைகளில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் மின்வாரியம் சீரான மின் விநியோகத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் தினசரி மின்நுகர்வு ஒரே நாளில் 475.45 மில்லியன் யூனிட்டாகப் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பொதுவாகக் கோடைக் காலங்களில் தினசரி மின்நுகர்வு 350 முதல் 370 மில்லியன் யூனிட்டுகளாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே நுகர்வு 471 மில்லியன் யூனிட் வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையை நம்பியிருந்த சூழலில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததும், எல்நினோ போன்ற காரணங்களால் வெப்பம் அதிகரித்ததும் மின் தேவையை உயர்த்தியுள்ளது.
பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக நீடித்து வருவதால், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாரத்தின் பயன்பாடு வழக்கத்தை விடத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜூலை மாதம் தொடங்கியது முதலே மாநிலத்தின் மின் தேவையும் நுகர்வும் படிப்படியாக உயர்ந்து புதிய பதிவுகளை ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி, கடந்த புதன்கிழமை 472.26 மில்லியன் யூனிட்டுகளும், வியாழக்கிழமை 473.57 மில்லியன் யூனிட்டுகளும் பதிவான நிலையில், வெள்ளிக்கிழமை தினசரி மின் நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது மின்வாரியத்தின் வரலாற்றிலேயே ஜூலை மாதத்தில் பதிவான மிக உயர்ந்த தினசரி மின்நுகர்வு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.



