காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்
காவல் துறை விசாரணையின்போது ஜோதிடரும் கோயில் பூசாரியுமான பரமசிவம் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரது உயிரிழப்பு தொடர்பாக மதுரை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த ஜோதிடர் பரமசிவத்துக்கும், அருகில் வசிக்கும் மாலதி மற்றும் அவரது கணவர் பாலகிருஷ்ணனுக்கும் இடையே கடந்த ஜூலை 17-ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதாகவும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜூலை 23-ம் தேதி இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டு, காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. அதன்பின்னர் ஜூலை 24-ம் தேதி பரமசிவம் தனது வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறி, ஆகஸ்ட் 5-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு போலீஸார் சென்று விசாரித்தபோது, தான் தவறி விழுந்ததாகவும், காவல் துறை நடவடிக்கை தேவையில்லை என்றும் பரமசிவம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை விசாரணை மேற்கொண்ட தலைமைக் காவலர் காவல் நிலைய பொதுநாள் குறிப்பில் பதிவு செய்துள்ளதாகவும் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
பரமசிவத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் வலியுறுத்தியபோதும், அவர் அதனை ஏற்க மறுத்து ஆகஸ்ட் 6-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதி அவருக்கு மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அய்யம்மாள் என்பவர் சிந்தாமணி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் இரு காவலர்கள் தனது கணவரை தாக்கியதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 15-ம் தேதி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆனால், ஆகஸ்ட் 16-ம் தேதி பரமசிவம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மேலூர் கோட்டாட்சியர் சங்கீதா விசாரணை மேற்கொண்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 17-ம் தேதி உடற்கூராய்வு மேற்கொள்ள ஒத்துழைக்காமல் அய்யம்மாள் உயர் நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மதுரை 5-வது நீதிமன்ற நடுவர் விசாரணை மேற்கொண்ட பின்னர், பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நடுவரின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



