முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கான பணிகள் தொடர்பான டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு முதல்வர் அலுவலகம் மாற்றப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கான டெண்டர்களில் ஏராளமான விதிமீறல்கள் இருப்பதாகவும், முறைகேடுகள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தலா ரூ.2.41 கோடி, ரூ.2.01 கோடி மற்றும் ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில், ஏ, பி, சி என 3 பிரிவுகளை உள்ளடக்கிய 3 டெண்டர்களுக்கான அறிவிப்பு கடந்த 13-ம் தேதி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விதிகளின்படி, டெண்டர் அறிவிப்பு அடுத்த நாளே இணையதளத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் 17-ம் தேதிதான் டெண்டருக்கான ஆவணங்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்த காலதாமதத்துக்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட டெண்டர் ஆவணங்களில் மதிப்பீடுகள் தொடர்பான விவரங்கள் இடம்பெறாதது ஏன் என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். “நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்” என்று கூறும் முதல்வர் விஜய், இந்த டெண்டர் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்காதது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.
ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க 30 நாட்கள் வரை காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற நிலையில், இந்த டெண்டர்களுக்கு மட்டும் ஏன் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒப்பந்ததாரர் யார் என்பதை முடிவு செய்வதற்கு முன்பாகவே, எதன் அடிப்படையில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன என்றும் நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார். இதுதொடர்பான கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெண்டர் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் அனைத்தும் வீண் வதந்திகள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தால், அதற்கான ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.



