குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் மாத இறுதியில், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) குஜராத் பிரிவின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீரென முடக்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அரசு மற்றும் காவல்துறையினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதாக மெட்டா (Meta) நிறுவனம் விளக்கம் அளித்தது.
இருப்பினும், கணக்குகள் முடக்கப்பட்டது குறித்துத் தங்களுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ காரணமோ அல்லது முன் அறிவிப்போ வழங்கப்படவில்லை என்று கூறி, ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கிய பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் பிரிவுக்கான சமூக ஊடகக் கணக்குகள் மீதான முடக்கத்தை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட அந்த அமர்வு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.



