தமிழகத்தில் 2,000 கி.மீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்த அவர், சென்னை – கோவை – தூத்துக்குடியை இணைக்கும் தொழில்தட விரைவுச்சாலை உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை – கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகள் மேம்பாடு, திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு உயர்மட்டச்சாலை உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்டச் சாலை, மும்பை – நவிமும்பை கடல் இணைப்புச் சாலை மாதிரியில் கட்டம் கட்டமாக அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதல்வரின் பாதுகாப்பான சாலைகள் இயக்கத்தின் கீழ் ரூ.500 கோடி செலவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிதல், சாலை பாதுகாப்புப் பணிகள், நெடுஞ்சாலை அவசர சிகிச்சை மையங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சாலைகளை முறையாகப் பராமரிக்க ரூ.250 கோடியில் சீரான சாலைகள் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கடல்வழிப் பயணிகள் படகு போக்குவரத்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னையின் கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கவும், வடசென்னையின் வியாசர்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்பட உள்ளன.
சென்னை – திருத்தணி சாலையில் பாடி முதல் திருநின்றவூர் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். ஊரகச் சாலைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆண்டுதோறும் 2,000 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ.2,550 கோடியில் ஊரகப்பகுதி சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
சென்னை, ஆவடி, தாம்பரம், திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் ரூ.1,000 கோடி செலவில் 500 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் – கத்திப்பாரா – கோயம்பேடு பகுதிகளை இணைக்கும் முக்கோண வழித்தடச் சாலைகள் மற்றும் பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலைகள் ரூ.400 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
சென்னையின் தொடக்க கிலோமீட்டர் புள்ளியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைகளின் தொடக்கப் புள்ளியை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுத்தூண் அமைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்கான சாலை உள்கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு மேம்பாட்டுத் திட்டங்களை வகுப்பதற்காக தமிழ்நாடு நெடுஞ்சாலை பெருந்திட்டம் தயாரிக்கப்படும்.
ராமேசுவரம் அக்னித் தீர்த்தத்தில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. அதேபோல், இந்தியா – இலங்கை இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் நாகப்பட்டினம் – காங்கேசன் துறை இடையிலான படகு போக்குவரத்துத் துறை சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், ரூ.1 கோடி தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனம் அமைக்கப்பட்டு, மாநிலத்தில் ரூ.200 கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான அரசு கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மொத்தமாக 33 முக்கிய அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டன.



