லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்
லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு, அரிய கலைப்பொருளை மீட்டுக் கொண்டு வந்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 1957 முதல் 1967-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை உள்ளிட்ட பல்வேறு உலோகச் சிலைகள் திருடப்பட்டன. இதுதொடர்பாக தமிழக சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சிலையின் பூர்வீகம் தொடர்பான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் புகைப்படச் சான்றுகளை சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திரட்டினர்.
திரட்டப்பட்ட ஆதாரங்கள் மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை மூலமாக இங்கிலாந்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், திருமங்கை ஆழ்வார் சிலையை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதித்தது.
இதைத்தொடர்ந்து தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 16-ம் தேதி திருமங்கை ஆழ்வார் சிலை பாதுகாப்பாக தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது. சிலையை மீட்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதனை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
தலைமைச் செயலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் காவல்துறை இயக்குநரும் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு அதிகாரியுமான டி.கல்பனா நாயக் ஆகியோர் மீட்கப்பட்ட சிலையை முதல்வர் விஜய்யிடம் காண்பித்தனர். அரிய கலைப்பொருளை மீட்டு கொண்டு வந்த அதிகாரிகளின் சிறப்பான பணியை முதல்வர் பாராட்டியதுடன், அவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை நேற்று மாலை கும்பகோணம் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அஸ்வினி மற்றும் செயல் அலுவலர் சுரேந்திர ராஜா ஆகியோர் சிலையை பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, கிராம மக்கள் திருமங்கை ஆழ்வார் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் கோயிலின் பாதுகாப்பு அறையில் சிலை வைக்கப்பட்டு பாதுகாப்பாக பூட்டப்பட்டது.



