கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: தவெக நிர்வாகி கைது
கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்றதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர்-கோவை சாலை, என்எஸ்கே நகரைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா, கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வருந்தியாபாளையத்தில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக கரூரில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டுச் சென்றார்.
அவர் வேட்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், பிரியாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சுதாரித்துக்கொண்டு தனது ஸ்கூட்டரை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.
இதன் காரணமாக சங்கிலி அறுபடாமல் தப்பியதுடன், அந்த நபரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த பதிவுகளின் அடிப்படையில், சங்கிலியை பறிக்க முயன்ற நபர் தவெக புகழூர் நகரச் செயலாளரும், மூளிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவருமான நந்தகுமார் என்பது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நந்தகுமாரை போலீஸார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கிலி பறிப்பு முயற்சி தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



