திமுக பாதையில் தவெக அரசு செல்கிறதோ? அண்ணாமலை கடும் விமர்சனம்
திமுக ஆட்சி சென்ற பாதையிலேயே தவெக அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளதாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்துகளை தெரிவிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அவர் தமிழக முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில் மக்களின் விமர்சனங்களை அலட்சியப்படுத்தியதுடன், எதிர்க்கருத்துகளை முடக்கியதுதான் என தெரிவித்துள்ளார்.
அதே பாதையில் தற்போதைய அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சமூக வலைதளங்களில் ஆளும் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம் தான் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு மற்றும் கைது போன்ற அதிகார நடவடிக்கைகள் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள் என்று கூறியுள்ள அண்ணாமலை, சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தப் போக்கை உடனடியாக தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.



