அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சுய விருப்பத்தை உறுதி செய்த பிறகே ஏற்றேன் என சபாநாயகர் விளக்கம்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் பதவிகளை ராஜினாமா செய்தார்களா என்பதை தனித்தனியாக விசாரித்து, அதில் திருப்தி அடைந்த பிறகே ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்துடன்தான் ராஜினாமா செய்தார்களா என்பதை சபாநாயகர் உரிய முறையில் விசாரித்திருக்க வேண்டும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வழக்கு தொடர்பாக சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தபோதும், அவர் நேரடியாக வழக்கை எதிர்கொள்ளவில்லை என்றும் அந்த தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற செயலாளர் ஏற்கெனவே தாக்கல் செய்த பதில் மனுவே போதுமானதாக இருந்ததால், தனியாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், சட்டமன்ற செயலாளர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்ததில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் அவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் ராஜினாமா செய்கிறார்களா என்பதை நேரடியாக விசாரித்ததாகவும், அந்த விசாரணையில் திருப்தி ஏற்பட்ட பின்னரே ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதாகவும் சபாநாயகர் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டது சட்டப்படி செல்லுபடியாகும் என்றும், இதில் எந்தவித சட்டவிரோத நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்றும் சபாநாயகர் தரப்பு வாதிட்டுள்ளது. எனவே, தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு பதிலளிக்க தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



