பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் அதிருப்தி: முதல்வர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என விவசாயிகள் சங்கம்
தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான புதிய அறிவிப்பு, சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று தமிழக விவசாயிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், யானை பசிக்கு சோளப்பொறி கொடுத்தது போல் முதல்வரின் செயல்பாடுகள் இருப்பதாகவும் சங்கம் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் ஆர். சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாகவும், பெரு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, அந்த அறிவிப்புக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கை எடுப்பது போன்ற வகையில் புதிய பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுபாஷ் தெரிவித்துள்ளார். அதன்படி, ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாகவும், ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரையும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், யானை பசிக்கு சோளப்பொறி கொடுத்ததைப் போன்ற நடவடிக்கையாகவே இதை விவசாயிகள் கருதுவார்கள் என்றும் தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே உரங்களின் விலை உயர்வு, வேளாண் இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத நிலை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொண்டு வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய சூழலில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருப்பதாகவும் விமர்சித்துள்ளது.
முதல்வரின் இந்த அறிவிப்பை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், இதன் மூலம் விவசாயிகள் மீண்டும் போராட்டக் களத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வரை விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். எழும்பூர் எல்ஜி கார்டனில் இருந்து புறப்பட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெறும் என்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார்.



