அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு கூடுதல் அறிவிப்புகள் தேவை: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
தமிழக அரசின் முதல் வரவு-செலவுத் திட்டத்தில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகளை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு வேலைவாய்ப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வேளாண் துறைக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை பட்ஜெட் பதிலுரையிலாவது அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில், பல முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அடிப்படைத் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சேவை உரிமைச் சட்டத்தை கொண்டு வருவது, ‘அறிவகம்’ என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு நகரம் அமைப்பது, மூத்த குடிமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் திருமணமாகும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கடந்த 13 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வந்த சேவை உரிமைச் சட்டம் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் வளர்ச்சிக்காக காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டம், தென்பெண்ணையாறு–பாலாறு மற்றும் தென்பெண்ணையாறு–செய்யாறு இணைப்புத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் அமைப்பதற்கான ஆய்வு, காவிரி–கோதாவரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்துவது போன்ற அறிவிப்புகளை பாமக வரவேற்பதாக அவர் கூறியுள்ளார். எனினும், தருமபுரி–காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர்–சோழர் பாசனத் திட்டம் மற்றும் காவிரி–சரபங்கா–திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.150 கோடி போதுமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார். பாசனத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.25,000 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் மின்கட்டண கணக்கெடுப்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளில் குறிப்பிடத்தக்க அளவிலான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவது மற்றும் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்படாதது கவலைக்குரியது என்றும் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைக்கப்பட்டிருப்பது கல்வித்துறையின் நிலையை பாதிக்கும் என்றும், ஆசிரியர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அன்புமணி எச்சரித்துள்ளார். மேலும், சமூகநீதி கணக்கெடுப்புக்கான நிதி ஒதுக்கப்படாதது, கோவை–அரியலூர் மின் வழித்தடத் திட்டத்தை தனியார் முதலீட்டில் செயல்படுத்தும் முடிவு மற்றும் மாநிலத்தின் கடன், வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ள சூழலில் மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது பலவீனமான நிதி மேலாண்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இறுதியாக, அரசு வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், நீர்ப்பாசனத் திட்டங்களை விரைவுபடுத்துதல், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்துதல் உள்ளிட்ட மக்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், பட்ஜெட் மீதான பதிலுரையிலாவது தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



