“சிங்கப் பெண் படை இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – சி.வி. சண்முகம் தமிழக அரசை விமர்சனம்
மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து தவெக அரசுக்கு வாக்களித்த நிலையில், பெண்களை இழிவாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சிங்கப் பெண் படை அமைக்கப்பட்டாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியிலும், எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளதாகவும், ஆனால் எந்த காலத்திலும் பெண்களை அவதூறாக சித்தரிக்கும் செயல்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தனக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும், ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற செயல்களை மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மாற்றத்துக்காகவே மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்ததாக குறிப்பிட்ட சி.வி. சண்முகம், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என விமர்சித்தார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல் இருப்பதாகவும், காவல்துறையின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்றும் அவர் கூறினார்.
மேலும், தன்னைப் பற்றிய விமர்சனங்களை பொருட்படுத்தவில்லை என்றும், ஆனால் பெண்களை தரக்குறைவாக பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களை துன்புறுத்துபவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு சிறப்பான காவல் கண்காணிப்பாளரை நியமித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவர், காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



