கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்: 31 பேரின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி அரசாணை ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்த அரசாணைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த சூழலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு வேலை என்பது போட்டித் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர்.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், அனைத்து குடும்பங்களுக்கும் இதுபோன்ற அரசு வேலை வழங்கப்படவில்லை என்றும், எனவே கரூர் சம்பவத்தில் மட்டும் வழங்கப்பட்ட பணி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பணிகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு ஜூலை 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காவல் துறையின் நிர்வாக குறைபாடு காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கு போன்ற சில சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், கருணை அடிப்படையிலான அரசு பணி வழங்குவதில் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றும், அதனால் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
அந்த வழிகாட்டுதல்கள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கிய விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு விரும்பினால் திறன் பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 31 அரசு பணிகள் வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.



