ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி: காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தும் வகையில், அகில இந்திய தலைமை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் இணைப்பது, தொண்டர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வந்து கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 1-ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவிப்பின்படி இந்த பயணம் நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதியை நிலைநாட்டுவது மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து போராடி வரும் ராகுல் காந்தியின் வருகை தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் இலக்குடன் தமிழக காங்கிரஸ் தனது அரசியல் பயணத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் தமிழக வருகை அக்கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



