மேகேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தல்
காவிரி நதிநீர் மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பினும், அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் கூறுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அரசுக்கு சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத்தர வேண்டிய தமிழக அரசு இதுவரை மவுனமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள் கடந்த காலங்களில் பலனளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு காவிரி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிவித்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வருடன் பெங்களூருவில் சந்தித்து பேசியதாக பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழக முதல்வர் விஜய், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறிய நிலையில், மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து முழுமையாக ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், டெல்டா மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தின் நலனுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும் என்றும், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை பெற்றுத்தர முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



