தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஜூலை 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான நிலுவை நீரை முழுமையாகப் பெறத் தமிழக அரசு உறுதியான அழுத்தம் தர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய 177.25 டிஎம்சி காவிரி நீரில், ஜூன் மாத நிலுவையான 6.28 டிஎம்சி மற்றும் ஜூலை மாதத்திற்கான பங்கு நீரை கர்நாடக அரசு இதுவரையிலும் முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கப்படும் என்ற கர்நாடக முதல்வரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பழனிசாமி, அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறையை மீறிச் செயல்படுவது சர்வாதிகாரப் போக்கு என விமர்சித்துள்ளார்.
வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குச் சேர வேண்டிய நிலுவை நீரைக் கர்நாடகாவிடம் இருந்து முழுமையாகப் பெற்றுத்தரத் தவெக – காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



