பாமகவின் 19-வது வேளாண் நிழல் பட்ஜெட் வெளியீடு: ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
பாட்டாளி மக்கள் கட்சியின் 2026–2027-ஆம் ஆண்டுக்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் வேளாண் துறைக்கு ரூ.68,000 கோடியும், நீர்வளத் துறை பாசனத் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடியும் ஒதுக்கீடு செய்ய யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதைக் கட்டாயமாக்கச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், குறுவை சாகுபடி இழப்புகளுக்கு ஏக்கருக்கு சிறப்பு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்களிப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 20 சதவீதமாக உயர்த்தவும், இத்துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை 9 மாவட்டங்களாக விரிவாக்கம் செய்தல், புதிதாக 3 வேளாண் பல்கலைக்கழகங்களை அமைத்தல் மற்றும் தமிழக அரசே புதிய பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 300 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம், புதிய மணல் குவாரிகளை மூடுதல் மற்றும் மேகேதாட்டு அணை முயற்சியை முறியடித்தல் போன்ற சூழலியல் சார்ந்த திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. பாமக தெரிவித்துள்ள இந்த யோசனைகளை வேளாண் பெருமக்களின் கோரிக்கையாகக் கருதி, தமிழக அரசு தனது வரும் நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிறைவேற்ற வேண்டும் என பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.



