டாடா சன்ஸ் தலைவர் பதவியை என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? பின்னணி தகவல்கள்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அவரது ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது பதவிக்காலம் 2027 பிப்ரவரியில் முடிவடைய இருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றியிருப்பதாகவும், மதிப்புமிக்க இந்த நிறுவனத்துக்கு இத்தனை ஆண்டுகள் பங்களிப்பு செய்தது தனக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் குழுமத்துக்கு தலைமை வகித்தது மிகுந்த கவுரவத்தையும், மிகப்பெரிய பொறுப்பையும் அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்குப் பிறகு டாடா சன்ஸ் தலைவர் பதவியை ஏற்கப்போகும் நபரை விரைவாக தேர்வு செய்யுமாறு நிர்வாக வாரியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தலைமைப் பொறுப்பு சுமுகமாக அடுத்தவரிடம் ஒப்படைக்கப்படும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
டாடா நிறுவனங்களின் பங்குகள் சரிவு
சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே, டாடா குழுமத்தைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. காலை 11.30 மணி நிலவரப்படி டாடா பவர் பங்குகள் 1.26 சதவீதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பங்குகள் 3.9 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 1.83 சதவீதமும் சரிந்திருந்தன.
ராஜினாமாவுக்கான பின்னணி என்ன?
சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு தொடர்பாக டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடாவுக்கும், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027-ம் ஆண்டுக்குப் பிறகும் சந்திரசேகரனை தலைவர் பதவியில் தொடரச் செய்வதற்கு நிர்வாக மட்டத்தில் ஒருமித்த ஆதரவு கிடைக்காததே அவரது ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
சந்திரசேகரன் தனது அறிக்கையிலும் இதற்கான பின்னணியை விளக்கியுள்ளார். சர் டோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை, 2027 பிப்ரவரி 20-ம் தேதிக்குப் பிறகும் தன்னை டாடா சன்ஸ் தலைவராக தொடர பரிந்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பரிந்துரையை டாடா சன்ஸ் நிறுவனத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவும் ஏற்றுக்கொண்டு, பின்னர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு அனுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இயக்குநர் குழு உறுப்பினர்களில் ஒருவர் அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஒருமித்த ஆதரவு இல்லாத சூழலில் தான் ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அந்த உறுப்பினரின் பெயரை சந்திரசேகரன் தனது அறிக்கையில் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. இருப்பினும், ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் அந்த எதிர்ப்பு டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடாவிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வாரிசு வளர்ச்சியும் காரணமா?
டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் இடையே ஏற்பட்டதாக கூறப்படும் கருத்து வேறுபாடுகளுக்கு வாரிசு தொடர்பான பின்னணியும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, தனது மகன் நெவில் டாடாவுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தில் எதிர்காலத்தில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என விரும்பியதாகவும், இதன் காரணமாக 2027-ம் ஆண்டுக்குப் பிறகு சந்திரசேகரன் தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிப்பதை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், டாடா குழும நிறுவனங்களின் எதிர்கால வணிக உத்திகள் மற்றும் பங்குதாரரான சப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் தொடர்பான விவகாரங்களிலும் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த என்.சந்திரசேகரன்?
என்.சந்திரசேகரன் 1987-ம் ஆண்டு டாடா குழுமத்தில் தனது பணியைத் தொடங்கினார். படிப்படியாக உயர்ந்து 2009-ம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். பின்னர் 2017-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தனது தலைவர் பதவிக் காலத்தில் ஏர் இந்தியா விமான விபத்து, சர்வதேச சந்தை அழுத்தங்களால் டிசிஎஸ் நிறுவனத்தின் ஐடி சேவை கட்டணங்களில் ஏற்பட்ட சவால்கள், ஜாகுவார் லேண்ட் ரோவரை பாதித்த சைபர் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை சந்திரசேகரன் எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்திருப்பது டாடா குழுமத்தின் அடுத்தகட்ட தலைமை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்கப் போகிறார் என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



