இடஒதுக்கீடு ரத்து கோரி புதிய போராட்டங்கள் தீவிரம்; இணையம் முதல் கள போராட்டம் வரை வலுக்கும் எதிர்ப்பு
இந்தியாவில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புதிய போராட்டங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் தொடங்கிய இந்த இயக்கம் தற்போது பல்வேறு மாநிலங்களில் நேரடி போராட்டங்களாகவும் மாறி வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு அனுமதி கோரி வரும் ஹர்ஷ் துபே இந்த இயக்கத்தின் முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடைபெற்ற காலகட்டத்தில், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று கவனம் பெற்றவர் ஹர்ஷ் துபே. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும், சில நேரங்களில் தற்கொலை போன்ற சம்பவங்களுக்கும் காரணமாகிறது என்றும் அவர் விவாதங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இதன் மூலம் பல ஊடக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று பிரபலமானார்.
இதற்கிடையில், ‘Reservation Hatao Andolan’ (RHA) என்ற பெயரில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இயக்கம் உருவாகியுள்ளது. இதே பெயரில் செயல்படும் சமூக வலைதள பக்கத்திற்கு லட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த ஜூலை 30-ம் தேதி ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ என்ற கோரிக்கையுடன் முதல் பெரிய போராட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என கர்னி சேனா அமைப்பினர் உறுதிமொழி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் இணையதளத்திலும், அரசியல் களத்திலும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இந்த இயக்கம் இன்னும் ஒருங்கிணைந்த தேசிய அளவிலான அமைப்பாக உருவெடுக்கவில்லை. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்க ஹர்ஷ் துபே முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், கல்வியாளர் ஆனந்த் ரங்கநாதன், பத்திரிகையாளர் அஜீத் பார்தி, எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அனுராதா திவாரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகள்
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்து, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் தங்களுக்கு வாய்ப்புகள் குறைகின்றன என பொதுப் பிரிவைச் சேர்ந்த சிலர் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இதனுடன், உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் வகையில் யுஜிசி கொண்டு வந்த புதிய விதிமுறைகளுக்கும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விதிமுறைகள் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என்றும், தவறான குற்றச்சாட்டுகள் மூலம் அவர்களின் கல்வி பாதிக்கப்படலாம் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
யுஜிசியின் புதிய விதிமுறைகள் உருவான பின்னணியில், பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தாத்வி ஆகியோரின் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் முக்கிய காரணமாக அமைந்தன. கல்வி வளாகங்களில் சாதி பாகுபாட்டை தடுக்கும் வகையில் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து யுஜிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டது.
பல மாநிலங்களில் பரவும் போராட்டங்கள்
இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள் தற்போது நாக்பூர், ஜெய்ப்பூர், லக்னோ, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல நகரங்களுக்கு பரவியுள்ளன. லக்னோவில் சவர்ண மோர்சா மற்றும் சவர்ண சமாஜ் அமைப்பினர் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்றும், யுஜிசி விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில், சாதி அடிப்படையிலான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போலீஸார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சல் மூலம் போராட்டத்தை கலைத்ததாக அமைப்புகள் குற்றம்சாட்டின.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜன ஜாகரன சமிதி சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டனர்.
இயக்கத்தின் 5 முக்கிய கோரிக்கைகள்
‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ இயக்கம் சார்பில் சில முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை:
- சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு பதிலாக வருமான அடிப்படையிலான இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே, அதுவும் ஒருமுறை மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- பயன்படுத்தப்படாத இடஒதுக்கீட்டு இடங்களை பொதுப் பிரிவினருக்கு வழங்க வேண்டும்.
- பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களை இடஒதுக்கீட்டில் இருந்து நீக்க தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும்.
- கல்வி சமநிலை உருவான பின்னர் இடஒதுக்கீட்டை படிப்படியாக நிறுத்தும் ‘சன்செட் கிளாஸ்’ முறையை கொண்டுவர வேண்டும்.
இருப்பினும், இந்தக் கோரிக்கைகளில் பல அரசியல் மற்றும் அரசியல் சாசன ரீதியாக சிக்கலானவை என்றும், அவை நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலையில், இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் பெரும்பாலும் இணையதள எதிர்ப்பாகவே இருந்து வருகின்றன. ஆனால், இந்த இயக்கம் தொடர்ந்து வலுப்பெற்றால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
வரும் ஆண்டுகளில் நடைபெற உள்ள உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநில தேர்தல்களில் சாதி மற்றும் இடஒதுக்கீடு விவகாரம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக உத்தரப் பிரதேச அரசியலில் சாதி அடிப்படையிலான கூட்டணிகள் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த புதிய இயக்கத்தின் தாக்கம் அரசியல் ரீதியாக கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.



