வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்; “கடுமையான விதிகள் இல்லை” என காங்கிரஸ் விமர்சனம்
பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் போதுமான கடுமையான விதிகள் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா 2026 எனப்படும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா, ஜூலை 29-ம் தேதி மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மாநிலங்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதா மீதான விவாதத்திற்கு 7 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை இந்த சட்டத்திருத்தம் வெளிப்படுத்துவதாக கூறினார்.
மேலும், புதிய சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையும், மூன்று மாதங்களுக்குள் வழக்கு விசாரணையும் முடிக்க வேண்டும் என விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவு என்பது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விவாதத்தை தொடங்கி வைத்து பேசும்போது, இந்த மசோதாவில் சில மேலோட்டமான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை முழுமையாக தடுக்கும் அளவுக்கு இந்த திருத்தங்கள் போதுமானதாக இல்லை என்றும், வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான தேர்வு முறையை உறுதி செய்ய மேலும் கடுமையான விதிகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
“காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்கிறது. ஆனால் வினாத்தாள் கசிவை முற்றிலும் தடுக்கும் வகையில் தேவையான அளவு கடுமையான விதிகள் இதில் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என கார்கே கூறினார்.
மசோதாவின் பின்னணி
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து, வினாத்தாள் கசிவை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 27-ம் தேதி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா 2026-ஐ மக்களவையில் தாக்கல் செய்தார்.
ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மக்களவையில் நடைபெற்ற விவாதங்களில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
ஜூலை 29-ம் தேதி நடைபெற்ற விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் உரையாற்றினார்.
பின்னர் விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கருத்தில் கொண்டு மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முந்தைய சட்டத்தில் சேவை வழங்குநர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், நிறுவன இயக்குநர்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் கீழ் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.5 கோடி வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேபோல், திட்டமிட்டு செயல்படும் குற்றக் கும்பல்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கும் வகையில் புதிய மசோதாவில் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.



