நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்
நெய்வேலி இந்திரா நகர் பி2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அமிர்தலிங்கத்தின் மகன் ஆனந்தராஜ் (36) என்பவருக்கும், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று ஆனந்தராஜ் தனது நண்பர்களுடன் நெய்வேலி வட்டம் 2 பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமைந்துள்ள சுடுகாட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபி, தனது நண்பர்கள் சுமார் 20 பேருடன் 3 கார்களில் சம்பவ இடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை எதிர்பாராத ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது கோபி தரப்பினர் ஆயுதங்களைக் கொண்டு ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பரான வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (26) ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் நரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆனந்தராஜ் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி நகர போலீஸார், உயிரிழந்த நரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆனந்தராஜ் மற்றும் நரேஷ்குமாரின் உறவினர்கள் நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனை முன்பு திரண்டனர். நரேஷ்குமாரை வெட்டிக் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் அண்மைய நாட்களிலும் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி சிதம்பரம் அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (43), ராமகிருஷ்ணன் (37) ஆகியோர் நிலத்தகராறு காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து ஆகஸ்ட் 10-ம் தேதி கடலூர் அருகே ரங்கா ரெட்டிப்பாளையத்தில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான முன்விரோதத்தில் புதுச்சேரி உறுவையாறைச் சேர்ந்த சசிகுமார் (31) வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று நெய்வேலியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நரேஷ்குமார் (26) உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்குள் 4 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நிகழும் இந்த கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.



