பல கோடி ரூபாய் சொத்துத் தகராறு: தாய், தம்பியை கொன்று நாடகமாடிய 2 சகோதரர்கள் கைது
சென்னை அண்ணாநகர் கிழக்கு முதல் அவென்யூ பகுதியில் வசித்து வந்த அஷ்ரப் நிஷா (68), தனது மகன்கள் அப்்ரார் அகமது, அஸ்ரார் அகமது மற்றும் இளைய மகன், பல் மருத்துவரான அசார் அகமது ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிஷாவும், அசார் அகமதும் வீட்டில் மயங்கிக் கிடப்பதாக அப்்ரார் மற்றும் அஸ்ரார் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவப் பணியாளர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இதையடுத்து அண்ணாநகர் போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உடலில் காணப்பட்ட காயங்களை அடுத்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையிலேயே குடும்பத்தினரின் வாக்குமூலங்களில் முரண்பாடு இருந்ததால், அப்்ரார் அகமது மற்றும் அஸ்ரார் அகமது மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தீவிர விசாரணையில், குடும்பத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்து பங்கீடு செய்வது தொடர்பாக நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவியிருந்தது தெரியவந்தது. அந்த சொத்தை விற்க தாய் அஷ்ரப் நிஷாவும், இளைய மகன் அசார் அகமதும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சம்பவத்தன்று இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த அப்்ரார் அகமது மற்றும் அஸ்ரார் அகமது இருவரும் சேர்ந்து தாய் மற்றும் தம்பியை தாக்கிக் கொலை செய்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு சம்பவம் இயல்பான மரணம் போல தோன்றும் வகையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற இருவரும், சில மணி நேரம் கழித்து மீண்டும் வந்து அவர்கள் மயங்கிக் கிடப்பதாக நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கில் அப்்ரார் அகமது (50), அவரது மனைவி பசியா ஆஸ்மா (42), அஸ்ரார் அகமது (49) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அப்்ரார் அகமதுவின் மகள் மற்றும் மகன் ஆகியோர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



