யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வழிவகை: மக்களவையில் திருத்த மசோதா நிறைவேற்றம்
யுபிஐ (UPI) மற்றும் பிற மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் வகையிலான வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் விவாதமின்றி நிறைவேறியது.
பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007, வருமான வரிச்சட்டம், 2025 மற்றும் நிதிச் சட்டம், 2026 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் இந்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஆகஸ்ட் 6) மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடத்த ஆளும் தரப்பு விருப்பம் தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக விவாதம் நடைபெறாமல் குரல் வாக்கெடுப்பின் மூலம் அது நிறைவேற்றப்பட்டது.
இந்த திருத்தத்தின் மூலம், யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் கட்டண சேவைகளுக்காக வங்கிகள் மற்றும் சேவை வழங்குநர்கள் கட்டணம் வசூலிக்க அரசால் அனுமதி வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதைத் தடுத்திருந்த சட்டப்பிரிவு நீக்கப்பட உள்ளது.
இதனால், எதிர்காலத்தில் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க சட்டரீதியான வாய்ப்பு உருவாகும். இருப்பினும், தனிநபர்களுக்கு இடையேயான (Person-to-Person) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் பொருந்தாது என்றும், நுகர்வோர்–நிறுவனம் (Consumer-to-Business) மற்றும் நிறுவனம்–நிறுவனம் (Business-to-Business) இடையேயான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான சட்டங்களில் முக்கிய மாற்றங்களுக்கு வழிவகை ஏற்பட்டுள்ள நிலையில், கட்டண வசூல் தொடர்பான இறுதி விதிமுறைகள் குறித்து அரசின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



