பேரவையில் மக்கள் பிரச்சினைகளை வலுவாக பேசாத திமுக எம்எல்ஏக்கள் மீது ஸ்டாலின் அதிருப்தி
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சினைகளை உரிய முறையில் சுட்டிக்காட்டாமல், தேவையற்ற விஷயங்களை பேசி நேரத்தை வீணடிப்பதாக திமுக உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக திமுக வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பேரவை விவாதங்களில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு திருப்திகரமாக இல்லை என கட்சித் தலைவர் ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, நேற்று முன்தினம் திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்ததாகவும், இதுதொடர்பாக முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை நேரில் அழைத்து அவர் கண்டித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் குறைபாடுகளை வலுவான ஆதாரங்களுடன் விமர்சிப்பதற்கு பதிலாக, சட்டப்பேரவையில் தனிப்பட்ட விஷயங்களைப் பேசி நேரத்தை வீணடிப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக சார்பில் பேசுவதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்களான தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை ஸ்டாலின் ஏற்கெனவே நியமித்திருந்தார். ஆனால், இவர்களின் பேரவை செயல்பாடுகளிலும் கட்சித் தலைமைக்கு முழுமையான திருப்தி இல்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, பட்ஜெட் விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவை, ‘1,000 ஏக்கர் நிலமும் ஏராளமான கால்நடைகளும் வைத்துள்ள பெரிய விவசாயி’ என குறிப்பிட்டது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதுபோன்ற நகைச்சுவையான பேச்சுகளை தவிர்த்து, விவாதிக்கப்படும் மக்கள் பிரச்சினைகளில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தவெக அரசின் குறைபாடுகளை துல்லியமாக சுட்டிக்காட்டுவதுடன், மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவதால், அவற்றை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் பேரவையில் நகைச்சுவையாகவும் தேவையற்ற வகையிலும் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், மக்களுக்கு பயனளிக்கும் முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை மட்டுமே வலுவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தவெக அமைச்சர்களுக்கு உரிய பதிலடி அளிக்கும் வகையில் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், தேவையற்ற பேச்சுகள் மற்றும் அநாவசிய விவாதங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் திமுக உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



