வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ பகுதியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்று வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.
அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தார். முதலில் 1996-ம் ஆண்டு குறுகிய காலத்துக்கு பிரதமராக இருந்த அவர், பின்னர் 1998 முதல் 1999 வரையிலும், தொடர்ந்து 1999 முதல் 2004 வரையிலும் நாட்டின் பிரதமராகப் பொறுப்பு வகித்தார். சிறந்த பேச்சாளர் மற்றும் நாடாளுமன்றவாதியாக மட்டுமின்றி, இந்தி கவிஞராகவும் விளங்கிய வாஜ்பாய், பாஜகவின் முக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்து அக்கட்சியின் அரசியல் பயணத்தில் முக்கிய பங்காற்றினார்.
தனது பிரதமர் பதவிக் காலத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது அரசியல் அணுகுமுறை மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளுக்காக அனைத்துக் கட்சியினரிடமும் மதிப்பைப் பெற்ற தலைவராக வாஜ்பாய் திகழ்ந்தார்.
தேசத்துக்கு அவர் ஆற்றிய நீண்டகால சேவையைப் போற்றும் வகையில், மத்திய அரசு 2015-ம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்கியது. அரசியல், நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வாஜ்பாயின் நினைவு நாள் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்படுகிறது.
அடல் பிஹாரி வாஜ்பாய் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி தனது 93-வது வயதில் காலமானார். அவரது நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று அவரது நினைவுகளைப் போற்றினர்.



